மலர்-14

by ஸ்ரீ
2 comments 211 views
A+A-
Reset

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு

மு.வ விளக்க உரை: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

அந்த ஒரு வார காலமும் ஒருவித கனவு நிலை போல் சென்றது மங்கைக்கும் முகுந்தனுக்கும். நண்பர்களுக்கு மேல் காதலர்களுக்கு கீழ் எனும் நிலை.

ஒருவர் மீதான மற்றவரின் பிடித்தம் தெள்ளத் தெளிவாய் தெரிந்தாலும் உணர்ச்சித் தழும்பியிருக்கும் நேரத்தில் எந்த முடிவும் வேண்டாம் என்று அத்தனை முதிர்வாய் பொறுமை காத்தனர்.

நிறைய நிறைய பேச்சுகள், பொதுவாய், கேலியாய் அன்பாய் இருவரது எதிர்கால கனவு பற்றியதாய் என அத்தனை உரையாடல்கள்.

கார்த்திகேயனுக்கு முக்கியமான சர்ஜரி வந்துவிட முந்தைய தினம் இரவே சென்னைக்குக் கிளம்பியிருந்தான். மங்கையின் வீட்டுத் தோட்டத்தில் அவனிருந்த வேளை முகுந்தனின் தந்தை பலராம் அவனை அழைத்திருந்தார்.

“அச்சா சுகமானோ?”

“…”

“இல்லா இது வேற காரியம் ஞான் நேரில் பார்க்கும்போது சொல்றேன்.”

“அச்சா…”

“பரா முகுந்தே..”

“என் ப்ரெண்ட்கிட்ட கொடுக்குறேன் சம்சாரிக்கு.”

“முகுந்தனிட ப்ரெண்டோ??!”

“ஒரு மின்ட்டே..”

“மலரே பேசு..”

“யாரு??”

“எல்லாம் வேண்டியவங்க தான் பேசு”

“ஹலோ.. வணக்கம்.. எப்படியிருக்கீங்க?”, என்றவள் யாரென்றே தெரியாமல் ராகம் பாட முகுந்தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

“மோளே.. மோளு பேரு எந்தானு?”

“மோலோ? இவ்வளவு வயசான ப்ரெண்டா?  என்ட பேர் மாமலர் மங்கை. உங்களோட பேர் எந்தா?”

“என் பேர் பலராம்.”

“ப… ஐயோ அங்கிள்!!!”, என்றவள் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு ஓட எத்தனிக்க முகுந்தனோ அவளை பேசுமாறு சைகை செய்தான்.

“சாரி சாரி அங்கிள் நீங்கனு சொல்லாம கொடுத்துட்டாங்க.”

“ஒண்ணும் பிரச்னையில்லா. நல்லாயிருக்கியாமா?”

“ஆஹா மலையாள நாட்டின் தமிழ் எவ்வளவு அழகு. உங்க அளவுக்கு உங்க பையனுக்கு பேச வரலை அங்கிள்.”

“ம்ம் கூடிய சீக்கிரம் வந்துரும்னு தோணுது..”, என்றது புரியாமல் விழித்தவளாய்,

“அப்றம் உங்க பிஸினஸ் எல்லாம் எப்படி போகுது அங்கிள்? ஆன்ட்டி நல்லாயிருக்காங்களா?”

“எல்லாரும் நலம். சீக்கிரமே நாம சந்திக்கலாம். வைச்சுரட்டுமா?”

“ஒரு நிமிஷம் அங்கிள் அவர்கிட்ட தரேன்.”

“அச்சா..”

“எந்தா அச்சனே போலயுள்ளே குட்டியாய் போய்?!( என்ன அப்பாவை போல பிள்ளையாய் மாறிட்ட போல?)”

“ச்சா நத்திங் கன்ஃபார்ம்ட் யெட்..”

“ஓ அப்பறம் எதுக்கு என்னோட பேச வைச்சது?”

“….”

“அம்மே பற்றி நினக்கறியில்லே?( அம்மாவைப் பத்தி தெரியும் தான?)”

“ம்ம் ஆனாலும் எனக்கு இஷ்டமானு ச்சா..”

“மனசிலாயி. இது நிண்ட ஜீவிதம். யோசிச்சு டிசைட் செய்.( புரியுது இது உன்னோட வாழ்க்கை யோசிச்சு முடிவெடு)”

“ம்ம்..”

“ஜஸ்ட் என்ஜாய் தி மொமெண்ட் மத்ததை பின்னே நோக்காம். பட் ஒன்ஸ் டிசைசட் ஆ குட்டிக்கு பில்லர் போல நிக்கணும் மனசிலாக்குகா..”

“ஷெரி அச்சா. வைக்கட்டே?”

“ம்ம் டேக் கேர்.”

“என்ன பண்ணி வைச்சுருக்கீங்க. நான் வேற யாருனு தெரியாம!”

“அச்சன் கொஞ்சம் ப்ரெண்ட்லி டைப் தான். சோ நோ வொரிஸ். அம்மா தான் பயங்கர ஸ்ட்ரிக்ட்.”

“ஐயோ!!”

“ஹே நல்லவா தான். பட் ரொம்ப கட் அண்ட் ரைட்டா இருப்பா.. அச்சன் எனக்கு ப்ரெண்ட் போல. “

“…”

“அம்மேயும் அச்சனும் லவ் மேரேஜ். அம்மாவிட வீட்டில் பயங்கர பிரச்சனை. அது பின்னே அம்மே அவ வீட்டை விட்டு வந்துட்டா. கிட்டதட்ட 29 வருஷம் அவா வீட்டை கான்டேக்ட் கூட பண்ணலை. அவங்களுக்கும் கோபம். இவளும் இறங்கி போகையில்லா.

அவங்களுக்கு நான் வேண்டாம் அங்கில் எனக்கும் அவங்க வேண்டாம் போல ஒரு மைண்ட் செட். இன்னும் சொல்லப் போனால் அம்மாவோட ஊர் பேர் கூட எனக்குத் தெரியாது. அவங்க குடும்பம் சம்ந்தப்பட்ட எதையும் சொன்னதும் இல்லை.

அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாதுனு அச்சனும் எதுவும் சொல்ல மாட்டார். அவங்களுக்கு உலகமே அச்சன் தான். ஒரு பாடு பிரேமம் அவங்க இரண்டு பேருக்கும்.

ஒரு வகையில் அந்த பைத்தியகாரத்தனமான பிரேமம் எனக்கு ஒரு பாடு இஷ்டம்.”

“கேட்கவே நல்லாயிருக்கே. ஆனால் இங்கே எல்லாம் லவ்னு பேச்சு வந்தாலே அரிவாள் தான் வரும்.”

“??!?!!”

“ஹே இல்லை அப்படி ஒரு பயத்தை இன்னமும் விதைச்சு வைச்சுருக்காங்கனு சொல்றேன். அண்ணா இரண்டு பேரும் அப்படி தான் சொன்னாங்க. கார்த்தி மாமாவே அவங்க சொந்த அத்தைப் பொண்ணை விரும்புறேன்னு சொல்றதுக்கு வீட்டில் அவ்வளவு பயந்தான்.”

“….”

“என் மனசை உடைச்சு சொல்லாம இருக்குறது இது மட்டும் தான் காரணம் தங்கமே..“, என்றவளுக்கு குரல் உடைந்தது.

“மலரே!!!”

“என்னால உனக்கு எந்த கஷ்டமும் பிரச்சனையும் வேண்டாம்னு தோணுது தங்கம். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குது. உன்னோடவே வாழ்க்கை மொத்தமும் இருக்கணும்னு தோணுது. ஆனாலும்..”

“!!!!”

“நீ வேணுமா இல்லை இந்த வீடு வேணுமானு ஒரு சூழ்நிலை வந்துருமோனு பயமா இருக்கு. எனக்கு இவங்க எல்லாரும் வேணும் அதே நேரம் நீயும்..”, என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“என்ட சக்கர பொன்னே.. கரையண்டா ப்ளீஸ்”

“என் மனசுக்குப் பிடிச்ச முதலும் கடைசியுமான ஆம்பளை நீங்களா இருந்துட்டா அதுவே இந்த வாழ்க்கைக்கு போதும் எனக்கு.”

“பொன்னு மலரே நான் இங்கே வந்துருக்கவே கூடாது இல்ல?”

“விதியை மாத்தி எழுதுற அளவு நமக்கு சக்தியில்லையே.”

“…”

“நான் கிளம்பிரட்டுமா? மதுரையை விட்டு? நீ இப்படி இருக்குறதை என்னால் பார்க்க முடியலை.” ,என்றதும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவளாய் முகத்தை அழுந்தத் துடைத்த வண்ணம் அவனது கண்களை நேராய் நோக்கி,

“இந்த கேரளத்து தங்கத்தை நான் ரொம்ப ரொம்ப விரும்புறேன். வாழ்க்கை முழுசும் உன்னோடே வாழ ஆசை படுறேன். விதி எனக்கு என்ன வைச்சுருக்குனு தெரியலை. ஆனால்..”

“???!!!”

“ஐ லவ் யூ என் தங்கமே..”, என்றவள் மீண்டுமாய் கலங்கிய கண்களை மீறி புன்னகைத்தாள்.

“நானும் மலருக்காக மட்டும் தன்னே யோசிச்சது. இங்கே இந்த அழகான குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாம மலரை என்னோட கொண்டு போகாம் வழி தெரியாமல் தான் அமைதியாவே இருந்தேன்.

என்ட அச்சன் அம்மையிட பைத்தியக்காரத்தனமான பிரேமம் எனக்கும் என்ட மலர் மேலயுண்டு.  எத்தர வல்லிய பிரஷனை வந்தாலும் நான் என்ட மலருக்காக நிக்கும்.

எந்த ஒரு நாளும் எனக்காக உன் குடும்பத்தை விட்டு வானு நான் சொல்ல மாட்டேன். எல்லாரோட ஆசீர்வாதத்தோட மலரோட அழகான சிரிச்ச முகத்தைப் பார்த்துக்கிட்டே நான் உன் கழுத்தில் தாலி கட்டும்.

அதுக்கு எத்தனை வருஷமானாலும் நான் வெயிட் செய்யும். ஞான் நின்னை பிரேமிக்கின்னு பொன்னு மலரே.”, என்றதைக் கூறியவனுக்கும் கேட்டவளுக்கும் மகிழ்ச்சி மிகுதியில் கண்கள் கலங்க உதட்டை அழகான புன்னகை நிறைத்திருந்தது.

“சாரி நீங்க சரியா தான் இருந்தீங்க என்னால தான் மனசுக்குள்ளே வைச்சுக்க முடியலை”

“இன்னைக்கு நீ சொல்லலைனாலும் ஊருக்கு கிளம்பும் போது நானே சொல்லிருப்பேன்னு நினைக்குறேன். அச்சன்கிட்ட ஏன் பேச சொன்னேன்னு கூட எனக்குத் தெரியலை.”

“பெரிய பாரம் குறைஞ்சா மாதிரி இருக்கு. இவ்வளவு தான் என் வொர்த். இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி இருந்ததே இல்லையா.. ப்பூ..”, என்றவள் உதடு குவித்து காற்றை வெளியிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“மலர் என்ட சுந்தரி பொன்னல்லே இனி எதுக்கும் கரையண்டா ஷெரியா?”

“ம்ம் அழ மாட்டேன்.”, என்றவள் கண்சிமிட்டி அந்தக் கள்வனை மொத்தமாய் களவாடிக் கொண்டாள்.

கனியன் அவர்களை அழைப்பதாய் குணவதி குரல் கொடுக்க இருவருமாய் உள்ளே சென்றனர்.

“தாத்தா..”

“வாப்பா.. இந்தா இதை வாங்கிக்கோ..”, என்றவர் வேட்டி சட்டை இருந்த தட்டை அவனிடம் நீட்டினார்.

“எதுக்கு தாத்தா இதெல்லாம்..”

“இந்த வருஷம் என் பேரப் பிள்ளைகள் எல்லாரும் திருவிழாக்கு இருக்காங்க. எல்லாருக்கும் புதுத்துணி எடுத்தோம். அதான் உனக்கும் கொடுக்குறேன். வாங்கிக்கோ.”, என்றதும் அவர் பாதம் பணிந்தவனாய் புதுஉடையை வாங்கிக் கொண்டான்.

“நாளைக்கு மீனாட்சித் திருக்கல்யாணம். எல்லாருமா புதுத்துணி போட்டுட்டு போயிட்டு வாங்க.”

அறைக்குள் இருந்து இருவருமாய் பேசியபடி வெளியே வர கலைச்செல்வியும் தாமோதரனும் தங்களுக்குள் அர்த்தமாய் பார்த்துக் கொண்டனர்.

“பாப்பா.. “

“சொல்லு அத்தே..”

“முகமெல்லாம் என்னவோ போல இருக்கே என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல அத்தே வெளியில் நின்னுட்டு இருந்தேனா தூசி விழுந்துருச்சு ஒரே உறுத்தல். இப்போ பரவாயில்லை அத்தே.”

“ஓ சரி “

“கார்த்தி நாளைக்கு வந்துருவாரா ஆன்ட்டி?”

“ம்ம் ஆமா பா நைட் கிளம்புறேன்னு சொல்லிருக்கான்.”

“ ஓகே ஓகே அவர் இல்லாம போர் அடிக்குது. கூடவே சேர்ந்து சுத்திட்டு இருந்தோமே..”

“பார்த்தியா அத்தே என் ப்ரெண்ட்னு வீட்டுக்கு வந்துட்டு இப்போ வீட்டில் எல்லாருக்கும் இவர் ப்ரெண்ட்.”

“விடு பாப்பா அவங்களும் கொஞ்ச நாள் எல்லாரோடையும்  பழகட்டும். இன்னும் இரண்டு நாள் தான் அப்பறம் நாங்க எங்க வேலையைப் பார்த்துட்டு போக வேண்டியது தான். இல்லங்க?”

“ம்ம் எனக்கே ஊருக்கு போய் ஹாஸ்பிட்டலில் செட்டில் ஆக நேரமெடுக்கும் போல அவ்வளவு நல்லா இருந்துச்சு”, என்று அவர்கள் போக்கில் பேசிக் கொள்ள மங்கைக்கு முகம் வாடிவிட்டது.

அதை உணார்ந்தவனாய் முகுந்தன் சமாதானமாய் தலையசைத்து விழி மூடித் திறந்தான். அனைவரிடமும் விடைபெற்று சற்று நேரத்தில் ஹோட்டல் அறைக்கு கிளம்பியவனை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் மங்கை.

“மலரே!”

“ம்ம்??”

“நாளைக்கு இ ட்ரெஸ் உடுத்துமோ?”, என்றவன் அவளது வாட்ஸ் அப் டீபியைக் காட்ட விழி விரித்தவளாய்,

“தாவணி..”, என்றவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அதில் முகுந்தனின் புன்னகை விரிவடைய மகிழ்ச்சியாய் கையசைத்துக் கிளம்பியிருந்தான்.

அறைக்குள் வந்தவளுக்கு மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. சரியாய் அந்த நேரம் குணவதி கையில் அரைத்த மருதாணியோடு அங்கு வந்தார்.

“கண்ணு..”

“சொல்லுமா..”

“மருதாணி வைச்சு விடுறேன் வா.”

“ம்ம் இந்தாம்மா..”, என்றவள் கையைக் கொடுத்துவிட்டு தாயின் மடியில் படுத்துக் கொண்டாள்..

“ஏன் மா!”

“சொல்லு கண்ணு..”

“இல்ல அப்பாவை உனக்கு எப்படி பிடிச்சுது?”

“நான் அவரு முகத்தையே கல்யாணம் முடிஞ்சு பத்து நாளுக்கு அப்பறம் தான் பார்த்தேன். இதில் எங்கே பிடிக்குறதெல்லாம்?”

“அப்படியில்லமா எதாவது ஒரு சந்தர்ப்பம் வந்துருக்குமே..”

“அதெல்லாம் தெரியலையே. ஆனால் திருமாவை உண்டாகியிருந்தப்போ சீமந்தம் முடிஞ்சு எங்க வீட்டுக்கு போனப்போ அப்படி ஒரு அழுகையா வந்தது.

எல்லாரும் எதுவும் சொல்லுவாங்களோனு பல்லைக் கடிச்சுகிட்டு பொறுத்திருந்தேன். அப்போ தோணிச்சு இவரில்லாம என்னால இருக்கவே முடியாதுனு.”

“சித்திக்கும் அப்படி தானா?”

“அப்பாவை விட சித்தப்பா இன்னுமே கோவகாரர். அதனால கொஞ்ச நாள் உன் சித்தி சித்தப்பாவை பார்த்தாலே தலைதெறிக்க ஓடுவா. அப்பறம் தான் அவர் சுபாவம் புரிஞ்சுகிட்டு அவ மேல பாசமா இருக்குறதை புரிஞ்சுக்கிட்டு நடக்க ஆரம்பிச்சா. ஏன் கண்ணு இதெல்லாம் கேட்குற?”

“இல்ல நாளைக்கு மீனாட்சித் திருக்கல்யாணமில்ல அதான் இதெல்லாம் தோணிச்சு. சொக்கநாதரை பார்த்தவுடனே மீனாட்சிக்கு இவர் தான் நமக்கானவர்னு தெரிஞ்சுடுச்சாமே? அப்படியெல்லாம் நடக்குமா?!”

“அவுக எல்லாம் சாமியில்லையா. அதுவுமில்லாம கடவுள் யாரையும் காரண காரியமில்லாம சந்திக்க வைக்குறதும் இல்லை வாழ்க்கையில் சேர்த்து வைக்குறதும் இல்லை கண்ணு.”, என்றதைக் கேட்டவாறு தன்னவனைப் பற்றிய சிந்தனைக்குள் தொலைந்து போனாள் மங்கை.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan July 20, 2026 - 3:57 am

👌👌👌👌👌👌👌

srichitra July 20, 2026 - 9:36 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode