மலர்-13

by ஸ்ரீ
2 comments 202 views
A+A-
Reset

குறள் 353:

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான நணிய துடைத்து

மு.வ விளக்க உரை: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

இருவருமே நேரடியாக மனதை திறந்து பேசிக் கொள்ளவில்லை எனினும்  ஒருவித அழகிய சூழலில் கட்டுண்டு இருந்தனர். அவளை எதாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணியவனாய்,

“மலரே எனக்கு மதுரை மீனாட்சியோட கதை சொல்லேன்.”

“ம்ம் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். மதுரையை ஆட்சி செஞ்சுட்டு இருந்த அரசனும் அரசியும் குழந்தையில்லைனு சிவபெருமானை வேண்டி யாகம் வளர்த்த போது அதிலிருந்து வந்தவள் தான் தடாதகை நாச்சியார்.

குழந்தையைப் பார்த்து அளவில்லாத சந்தோஷம் அடைஞ்சாலும் அந்த குழந்தைக்கு மூன்று தனங்கள் இருக்குறதைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சாங்களாம்.

அப்போ ஒரு அசரீரீ இந்தக் குழந்தைக்கு ஆணுக்கு நிகராய் அத்தனை கலைகளையும் கற்றுக் கொடுத்து அரியணையில் அமர வை. திருமண காலம் வரும் நேரம் அவளது மணாளனைப் பார்க்கும் நொடி மூன்றாவது தனம் மறைஞ்சுடும்னு சொல்லிச்சாம்.

அதைப் போலேவே மீனாட்சி  அத்தனை கலைகளையும் கற்றுக் தேர்ந்து ஆணுக்கு நிகரான நிமிர்வோடு அரியணை ஏறுறாங்க. பட்டாபிஷேகத்துக்கு பிறகு மீனாட்சி திக்கெட்டும் சென்று போர்   செஞ்சு வெற்றியும் பெறுறாங்க.

இப்படி எல்லா திக்கிலும் வெற்றி பெற்ற மீனாட்சிக்கு கடைசியாய் சிவனோட போர் தொடுக்கும் நிலை வரும்போது சிவனை நெருங்க நெருங்க வெட்கத்தில் தலை குனியுறாங்க.  அவங்க கையில் இருந்த வாளை கீழே போட அவரது மூன்றாவது தனமும் மறைஞ்சு போகுது.

இவர் தான் தனக்காகவர்னு உணர்ந்து வெட்கமும் சந்தோஷமுமாய் சிவபெருமான்கிட்ட தன்னை ஒப்புவிக்குறாங்க. அடுத்ததாய் என்ன அவங்க கல்யாணம் தான். தேவர்கள் முனிவர்கள்னு படை திரண்டு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணத்தை கண்டு களிக்குறாங்க.

இதுதான் இங்கே பத்து நாள் திருவிழா. அதில் மீனாட்சியின் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம் தேரோட்டம் இதெல்லாம் தான் ரொம்ப முக்கியமா கொண்டாடப்படுது.

தடாதகை நச்சியார் தான் அவங்க பேருனாலும் அவங்களோட கண் மீன் மாதிரி இருந்ததுனாலேயே மீனாட்சினு அழைக்கப்பட்டதா சொல்லுவாங்க.”

“ஓ நைஸ். அப்போ அழகர் ஆத்தில் இறங்கும் கதை எந்தா?”

“கள்ளழகர் ஆற்றில் இறங்குறதோட புராணக்கதைனு பார்த்தா மண்டூக மஹரிஷினு ஒருத்தர் துர்வாச முனிவரோட சாபத்தால் தவளையாகி விட அவர் சாப விமோஷனம் கேட்கும் போது,

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் அழகர் வைகை ஆற்றில் நீராட வருவார் அதுவரை அவரை நினைச்சு தவம் செய். அவர் வந்து உனக்கு சாப விமோஷணம் கொடுப்பார்னு சொன்னாராம்.

அதுக்காக தான் அழகர் ஆற்றில் இறங்கினதா கதை. அதே மாதிரி அவர் முதலில் இறங்கினது தேனூரில் இருக்கும் வைகையில் தான்.

திருமலை நாயக்கர் காலத்தில் தான் சைவம் வைணவம் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்கவும் மக்கள் ஒற்றுமையாய் இதை கொண்டாடவும் மதுரையில் வைகையில் அழகரை மாற்றி இறக்க ஆரம்பிச்சார்.

ஆனால் காலப்போக்கில் மீனாட்சி சுந்தரஷ்வரர் திருக்கல்யாணத்தைப் பார்க்க கிளம்பிய அழகர் பக்தர்களுக்கு எல்லாம் காட்சி கொடுத்து வந்ததால் தங்கையோட கல்யாணத்தை பார்க்க முடியாம போய் அதனால கோபத்தோட தங்கையைப் பார்க்காமலேயே வைகையில் குளிச்சுட்டு அப்படியே போயிட்டதா சொல்ல ஆரம்பிச்சாங்க.”

“தேங்க் யூ மலரே அழகா கதை சொல்ற.”

“…”

“துறு துறு மலர் பொண்ணு ஒரு அழகெங்கில் இ நாணம் கொண்ட மலர் இன்னும் ப்யூட்டிபுல்.”

“என்னால மனசில் ஒண்ணு வைச்சுட்டு வெளியில் சாதாரணமா பேச முடியலை. ஹீரோ சார் என்னை எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. எனக்குத் தெரியலை நான் ஏன் இப்படி..”

“ஹீரோ.. சார் இதெல்லாம் அல்லாத மலரிண்ட, மலரோட மாத்திரம் பெஸ்ட் ப்ரெண்டா இருக்கவே எனிக்கி  இஷ்டமானு.”

“…”

“எனக்கி அறியாம் நம்மளடே இந்த ஃபேஸ்.. இருந்தாலும் அவசரப்பட்டு எந்த முடிவுக்குமே வர வேண்டா. மலருக்கு நேத்தில் இருந்து தான் இந்த குழப்பம். பட்சே எனக்கு மலரை கண்ட நாள் முதல்லே..”

“!!!”

“மலரிண்டே பேஷனை முதலில் நோக்காம். குறைச்சு டைம் எடுத்து நாம் இதுதான் ப்யூச்சர்னு டிசைட் எய்தால் அப்பறம் ஞான் கண்டிப்பாயிட்டு என் மனசை மலரிடத்து கன்வெஸ் செய்யும்.”

“…”

“மலருக்காக எப்பவும் ஞான் இருக்கும். ப்ரெண்ட்ங்கிலும் ஷெரி வேறெதானாலும் ஷெரி. டோண்ட் ஸ்ரெஸ் யுவர்செல்ப். மனசிலாயோ?”

“ம்ம்..”

“எப்பவும் போல் மலர் ஒரு பாடு பேசி கேட்க ஆஷையாயிட்டுண்டு. இந்த பத்து நாளுக்கு பின்னே நான் நீ எல்லாவரும் ஜோலி நோக்கிக்கொண்டு போவணும் அல்லே. சோ..”

“புரியுது இருந்தக் குழப்பம் இப்போ இல்லை. நீங்க சொல்ற மாதிரி இதை இப்படியே விட்டுடலாம். ஒரு வேளை நீங்க மட்டும் தான் என்னோட எதிர்காலம்னு எனக்குத் தோணிணால் இந்த உலகமே எதிர்த்தாலும் அதை நான் மாத்திக்க மாட்டேன்.”, என்றதில் அவளையே ஆழப் பார்த்திருந்தான் முகுந்தன்.

தன் மனதிலிருப்பதை அவளிடம் கூற வேண்டும் என ஒரு போதும் நினைத்திராதவனுக்கு மங்கையின் தவிப்பும் குழப்பமும் அவனை வாய் திறக்கச் செய்திருந்தது.

நேற்று வரையிலும் கூட மங்கைக்கு தான் வெறும் நண்பன் மட்டும் தான் என்பதை உணர்ந்தவனாய் அப்படியே அமைதியாய் நண்பனாகவே அவளுடனான பொழுதுகளை கழித்துச் செல்லவே நினைத்திருந்தான்.

ஆனால் முந்தைய தினம் மாலை தனக்காக அவள் மீனாட்சி அலங்காரத்திற்கு சம்மதித்ததே அவனது திடத்தை ஆட்டம் கொள்ளச் செய்திருந்தது.

இப்போது கேட்ட மீனாட்சியின் கதையில் வருவது போல் அந்த ஒரு நொடியில் மங்கையின் இதயத்தை வென்றுவிட்ட மாயம் என்னவென்பது இப்போது வரையுமே அவனுக்குப் புரியவில்லை.

ஒருவேளை இதுதான் கடவுளின் செயலா? இப்படி தான் தங்களின் பயணம் ஒருவரோடு ஒருவர் பிணைந்து தொடர வேண்டும் என்பது தான் விதியா? அதிலும் அந்த அலங்காரத்தில் விளக்கொளியில் கண்கூச ஒருநொடி அவனைத் தேடி கண்டுகொண்டபோது எடுத்த புகைப்படத்தில் அவள் முகம் காட்டும் உணர்விற்குப் பெயர் தான் என்ன?

தன்னோடு ஒரு செல்பி என்றதும் விமானத்தில் சிறு பிள்ளையென பற்கள் தெரிய இரு விரல்களை உயர்த்தி ஒரு கண்ணைச் சுருக்கி என அத்தனை சேட்டைகளோடு புகைப்படம் எடுத்தவளுக்கு நேற்றைய தினம் அத்தனை நாணமும் குறுஞ்சிரிப்பும் எங்கிருந்து வந்ததென்பது இயற்கையின் மாபெரும் அதிசயம் என்றே தோன்றியது.

இருவரின் மோன நிலையைக் கலைக்கும் வண்ணம் கனியன் அவனை அழைக்க அவரை நோக்கி எழுந்துச் சென்றான் முகுந்தன்.

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் தனதறைக்குள் வந்தவள் நேராய் ஆளுயர கண்ணாடியின் முன் சென்று நிற்க அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாத உணர்வுகளுக்குள் சிக்கிக் கிடந்தாள் மங்கை.

தனக்கு அவனைப் பிடித்தது என்பதே அத்தனை உற்சாகத்தை கொடுத்த நிலையில், அவனோ பார்த்த நாள் தொடங்கியே அப்படி தான் இருக்கிறது என்று கூறும்போது..

இருந்தும் அவன் கூறிய இந்த கால அவகாசம் என்பது நிச்சயம் தேவை என்பதாய் பட்டது மங்கைக்கு. தன் முடிவில் மாற்றம் இருக்கப் போவதில்லை எனினும் அவனது அழகும் சுற்றமும் வேலையும் ஒரு வேளை அவனது மனதை மாற்றலாம்.

இப்போதிருக்கும் இதே மனநிலை நாட்கணக்கில் மாத கணக்கில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்கும் போதும் இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாகி விட்டிருந்தாள்.

தனது கைப்பேசியை எடுத்து நேற்றைய புகைப்படத்தைப் பார்த்தவளாய் உதட்டோரப் புன்னகையோடு அதை தனது வால்பேப்பராய் வைத்துவிட்டு மீண்டுமாய் கீழே ஓடினாள்.

அன்று மாலை கோவிலுக்குச் சென்ற போது யாரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்ற நம்பிக்கையில் தொப்பியின்றி முகக்கவசம் மட்டும் அணிந்து மங்கையோடும் கார்த்திகேயனோடும் சுற்றித் திரிந்தவனை இளசுகளின் பட்டாளம் ஒன்று சட்டென சூழ்ந்து கொண்டது.

“ஹாய் நீங்க உன்னி முகுந்தன் தானே?!

“அது..”

“உங்க படம் பார்த்துருக்கோம். ரொம்ப நல்லா நடிக்குறீங்க.”

“தேங்க் யூ..”

“ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?”, என்றபடி பக்கத்தில் பார்த்த பெண் மங்கையிடம் மொபைலைக் கொடுத்து போட்டோ எடுத்துத் தருமாறு கூற அதை வாங்கி அவர்களுக்கு எதிரில் நின்றவளுக்கு உள்ளுக்குள் அனல் பறந்தது.

நடுவில் முகுந்தன் நிற்க இருபுறமுமாய் மூன்று மூன்று பெண்கள் நின்றிருந்தனர்.

ஒரு நொடி முகுந்தனிடம் காரப்பார்வையை வீசியவளாய் போட்டோ எடுத்துவிட்டு மொபைலை கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தாள்.

“என்ன பாப்பா கடைசியில் உன்னை போட்டோகிராரா மாத்திட்டாங்க..”

“கார்த்தி மாமா கொலைவெறியில் இருக்கேன் ஓடிரு.”

“மலரே ஞான் எந்து செய்யும்?!”

“ம்ம் செஞ்ச வரை போதும் எல்லாரும் மூடிகிட்டு வந்தா போதும்.”, என்றவள் முன்னே செல்ல கார்த்திக் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது முகுந்தனை அழைத்துச் சென்றான்.

காரில் அமர்ந்ததும் பின்னிருக்கையில் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள் மங்கை.

“ஹீரோ ப்ரெண்ட்னால் சும்மாவா பாப்பா இதெல்லாம் சகஜம்.”

“நீ இப்போ மட்டும் உன் வாயை மூடலை??”

“போடி லூசு. அவ அப்படி தான் முகுந்தன். கொஞ்சம் பொசசிவ். வீட்டிலேயே இவ எல்லார்கிட்டேயும் செல்லம் கொஞ்சுவா ஆனால் யாரும் இவளைத் தவிர யாரையும் கொஞ்சிட கூடாது. சரியான சைக்கோ.”

“சைக்கோ என்ன பண்ணும்னு இப்போ காட்டுறேன்.”, என்றவள் அருகிலிருந்த தலையணையைத் தூக்கி கார்த்திகேயன் தலையிலேயே போட்டு அடித்தாள்.

“எந்தா மலரே.. கார்த்தி பாவம்.”

“நியாயமா இந்த அடி உங்களுக்கு விழ வேண்டியது”, என்று கார்த்தி இன்னுமாய் சிரிக்க கண்களை விரித்தவனாய் மங்கையிடம் கண்களாலேயே வேண்டாம் என்பதாய் கோரிக்கை வைக்க மீண்டுமாய் பின் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டாள் மங்கை.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan July 19, 2026 - 2:28 pm

💞💞💞💞💞💞💞

srichitra July 20, 2026 - 9:30 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode