வரம்-30

by ஸ்ரீ
0 comments 98 views
A+A-
Reset

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

விளக்கம்
ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)

காலை அன்பு கடைக்கு கிளம்பிய நேரமே உடை மாற்றி அமர்ந்திருந்தாள் காயத்ரி.

“கண்மணி?!”

“இல்ல உன் ஹோட்டல் போற வழியில் இருக்குற ஹாஸ்பிட்டல் 24/7 இருக்கும்ல.அங்க போலாம் அன்பு.”

“சரி வா போலாம்..”,என்றவன் யாரையும் எழுப்பாமல் சத்தமின்றி காயத்ரியோடு கிளம்பியிருந்தான்.

மருத்துவமனைக்குச் சென்று படிவங்கள் பூர்த்தி செய்து மருத்துவரின் முன் அமர்ந்திருந்த இருவருக்குமே பயமும் பதட்டமும் மன்றிக் கிடந்தது.

“செக் பண்ணிட்டிங்களா காயத்ரி?”

“இல்ல டாக்டர் நேரா இங்க தான் வரோம்.”

“ஓ சரி செக் பண்ணிட்டு வாங்க”,என்றவர் காயத்ரியை அனுப்பி வைக்க அன்புவிற்கோ இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது.

கைகளுக்குள் முகம் புதைத்து அமர்ந்திருந்த அன்பு தோள்மீது பட்ட ஸ்பரிசத்தில் அவசரமாய் எழுந்து நிற்க அவன் கையில் ப்ரெக்னென்ஸி கிட்டை திணித்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“வீ ஆர் ப்ரெக்ணெட் அன்பு..”,என்றவள் உடல் குலுங்க அன்புவோ பேசக் கூட தோன்றாது அவளை இன்னுமாய் தன்னோடு இறுக்கிக் கொண்டன்.

“லவ் யூ அன்பு..”

“லவ் யூ டி பொண்டாட்டி…இனி காயூவோட கண்ணீருக்கு வேலையே இருக்க கூடாது..ஹம்ம்??”

“கண்டிப்பா..எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா…”

“வா டாக்டரை பார்த்துடலாம்..”,என்றவன் அவளை தன்னிலிருந்து பிரித்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

“கங்க்ராஷூலேஷன்ஸ் போத் ஆப் யூ..”

“தேங்க் யூ டாக்டர்.”

“40 நாள் ஆனதுனால ஸ்கேன் ஆல்சோ பார்த்துடலாம்.நான் எழுதி தரேன் பக்கத்துல லேப் எடுத்துட்டு வந்துருங்க..அப்பறம் மெடிசின்ஸ் எழுதி தரேன்.”

“ஓகே டாக்டர்..”

காயத்ரி தன் வயிற்றில் வைத்த கையை கீழே இறக்கவே இல்லை.அன்புவோ அவளது இடக்கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்.

ஸ்கேன் முடித்து ரிப்போர்டோடு மருத்துவரைச் சந்திக்க லேசாய் புன்னகைத்தவர்,

“ஐ திங்க் இட்ஸ் டிவின் பேபிஸ்.எதுக்கும் நெக்ஸ்ட் மந்த் இன்னொரு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்.டிராவல் அவாயிட் பண்ணுங்க நல்ல ரெஸ்ட் எடுங்க.

அட்லீஸ்ட் நாலாவது மாசம் வர கேர்புல்லா இருக்கணும்.தேவையான மெடிசின்ஸ் எழுதி தரேன்.அண்ட் இது என் நம்பர் எப்போ என்ன எமர்ஜென்சினாலும் கால் பண்ணுங்க”,என்றவர் புன்னகைத்து விடையளித்தார்.

காரில் அமர்ந்த இருவருக்குமே மனம் கொள்ளா மகிழ்ச்சியில் தவித்தது.

“அன்பு…”

“இரண்டு பாப்பா டி..நான் சொன்னேன்ல உன் தொல்லை தாங்காம கடவுள் நிறைய கொடுக்க போறாருனு”,என்றவனின் கரம் காயத்ரியின் வயிற்றை மென்மையாய் வருடிக் கொடுத்தது.

“எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்ல..”

“ம்ம்..”

“இரண்டு வருஷ ஆசை அன்பு..சொல்லப் போனா இத்தனை ஆசை வாழ்க்கையில் பட்டதேயில்ல..”

“இனி சந்தோஷமா இரு டி கண்மணி..உனக்காகவே கடவுள் அள்ளி கொடுத்துருக்காரு.”

அதற்குள் ராகினியிடம் இருந்து அழைப்பு வந்திருக்க அன்பு ஏற்று பேசினான்.

“அன்பு எங்க டா இரண்டு பேரையும் காணும்?எங்களையும் எழுப்பல என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல மா..இதோ வந்துட்டே இருக்கோம்.”,என்றவன் காயத்ரியைப் பார்த்து புன்னகைத்து காரை இயக்க ஆரம்பித்தான்.

ராகினி வாசலிலேயே பதட்டமாய் அமர்ந்திருக்க அமைதியாய் வந்த மருமகளைப் பார்த்து இன்னமும் பயந்து போனார்.

“அன்பு என்ன டா அன்னைக்கு மாதிரி எதுவும் பிரச்சனையா?எங்க போனீங்க இரண்டு பேரும்?”,என்றவருக்கு பதில் கூறாமல் அவர் கைப்பிடித்து உள்ளே ஹாலிற்குச் சென்றவள் இறுக கட்டிக் கொண்டாள்.

“காயூ என்னாச்சு கண்ணா?டேய் என்ன எதாவது சொல்லுங்க இரண்டு பேரும்?”,என்ற ராகினியின் சத்தத்தில் அறையிலிருந்து வெளி வந்த ராகவன் காயூ நின்ற விதத்தைப் பார்த்து வேகமாய் அன்புச் செல்வன் அருகில் வந்தார்.

“ம்மா..சர்க்கரை இருந்தா எடுத்துட்டு வா..”,என்று அன்பு புன்னகைக்க ராகவனுக்கும் ராகினிக்கும் உள்ளம் நிறைந்து போனது.

அவரறியாமல் ராகினி மருமகளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டார்.ராகவன் ஆதரவாய் மருமகள் தலையைத் தடவ அன்புவோ இன்னுமின்னும் மகிழ்ந்து போனான்.

“காயூம்மா..ரொம்ப ரொம்ப சந்தோஷம்..அந்தக் கடவுள் உன் நல்ல மனசுக்கு நல்லதே பண்ணுவார் டா..ஏங்க நான் போய் எதாவது ஸ்வீட் செய்யுறேன்”,என்றவரைக் கைப் பிடித்து தடுத்தவளை கேள்வியாய் பெரியவர்கள் பார்த்து நிற்க கண்களைத் துடைத்துக் கொண்டவளாய்,

“ஆளுக்கு ஒரு குழந்தையை கொடுத்துருவேன்.என் புருஷனை மாதிரியே வளர்த்து தரணும் சரியா?”,என்றவள் கூறியதன் பொருள் புரிந்து ஆச்சரியமாய் அன்புவைப் பார்க்க ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

“ட்வின்ஸ்னு சொல்லிருக்காங்க நெக்ஸ்ட் மன்த் ஸ்கேன்ல கன்பார்ம் பண்ணிடலாம்னு சொன்னாங்க பா..”

“முருகா என் வேண்டுதலுக்கு செவி சாய்ச்சுட்டியே..ஏங்க..”,என்றவர் கலங்கிய கண்களோடு கணவரின் கைப்பிடித்துக் கொண்டார்.

“மருமகளே என் பசங்க பிறந்ததை விட பலமடங்கு சந்தோஷம் நீங்க சொன்ன நல்ல செய்தியால தான் எனக்கு..”

அதற்குள் சிறியவர்கள் கீழே வர விஷயமறிந்து இன்பாவும் ஆனந்தனும் அன்புவை கட்டிக் கொள்ள அபிநயாவும் தேன்மொழியும் காயத்ரியை கை வளைவிற்குள் வைத்துக் கொண்டனர்.

“அக்கா ட்வின்ஸ்னா பொதுவாவே மார்னிங் சிக்னஸ் அதிகமா தான் இருக்கும்.நல்லா ரெஸ்ட் எடுங்க..ரிப்போர்ட் கொடுங்க பார்க்கலாம்.”

“அண்ணி எங்களை மாதிரி ட்வின்ஸா..ஜாலியா இருக்கும்.இரண்டும் பொண்ணு வேணும் அண்ணி அப்போ தான் வித விதமா ட்ரெஸெல்லாம் போட்டு பார்க்க முடியும்.”

அத்தனைக்கும் காயத்ரியிடம் பதில் புன்னகை மட்டுமே.அன்புவும் அவளைத் தான் கவனித்துக் கொண்டு இருந்தான்.அதீத மகிழ்ச்சியில் இருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

ராகினி காயத்ரியின் பெற்றோருக்கு அழைத்து விஷயத்தைக் கூற பத்து மணிக்கு மேல் கிளம்பி வருவதாய் கூறினர்.அனைவரோடும் பேசி முடித்து அறைக்குள் வந்தவள் சாளரத்தின் வழியே வெளியே வெறித்திருக்க அன்பு ஆதரவாய் தோள் பற்றி அருகில் நின்றான்.

“என்னாச்சு டி?”

“அம்மாவுக்கு உன் குழந்தையைப் பார்க்கணும்னு எவ்வளவு ஆசை இருந்துருக்கு பார்த்தியா?”

“?!”

“தப்பா சொல்லல டா..என் ஒருத்திக்காக அவங்க எதிர்பார்ப்பைக் கூட வெளிப்படுத்தாம இத்தனை நாள் இருந்துருக்காங்களேனு நினைச்சேன்.”

“….”

“யோசிச்சு பாரு கல்யாணம் ஆன மறுமாசமே நல்ல சேதி இல்லையானு கேட்குற மாமியாருங்க தான் இங்க எல்லாருமே..

அப்படி குழந்தை விஷயம் நடக்கலைனால் உடனே மருமகளை குத்திக் காட்டுறது இப்படி ஆகிருச்சேனு பொலம்புறது அவ்வளவு ஏன் அன்னைக்கு நான் சொன்ன இன்ஸ்பெக்டர் கதை மாதிரி டிவோர்ஸ் வரை கூட யோசிப்பாங்க டா.

ஆனால் அம்மா இதுவரைக்கும் அவங்களோட மனத்தாங்கலை அப்பாவை தாண்டி யாருகிட்டேயும் சொன்னதேயில்ல.அப்பா அதுக்கும் மேல.இரண்டு பேருக்கும் நாம டாக்டர்கிட்ட போய் ஜென்ரல் செக்கப் பண்ணிணது கூட தெரியாது.

அப்பவும் ஒரு தடவை கூட டாக்டரை பார்க்குறீங்களா எதாவது பிரச்சனை இருந்தா சரி பண்ண பார்க்கலாம் இப்படி எதுவுமே சொன்னதில்ல…

இரண்டு வருஷத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்னு கூட உனக்குத் தோணலாம் அன்பு.ஆனால் பல பெண்களுக்கு அது நரகம்.

குழந்தை பிறக்கலையேங்கிற கவலையை விட மாமியாரோ நாத்தனாரோ அவங்களை நடத்துற விதம் தான் மனசளவில் ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும்.

அபி வீட்டு சொந்தகாரங்க எல்லாம் எத்தனை தடவை என்கிட்ட இதுபத்தி கேட்டுருக்காங்க..ஒரு தடவை கூட அம்மாவோ அப்பாவோ குறையா பேசினதே இல்லை டா.

என்னை யாருக்கிட்டேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்கங்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?”

“காயூ மா..”

“இல்ல டா மனசு அவ்வளவு நிறைவா இருக்கு.இப்படி எல்லாம் புகுந்த வீடு இருந்துட்டா வேற என்ன வேணும்.நாம சந்திச்ச முதல் நாள் உன்கிட்ட சொன்னேனே நீ என்னை நல்லா பார்த்துக்கோ நான் உன்னைச் சார்ந்தவங்களோட உன்னையும் பல மடங்கு பத்திரமா பார்த்துப்பேன்னு..

காதல் கல்யாணம் பண்ற பல பெண்கள் அப்படி ஒரு மனநிலையில் தான் கல்யாணம் பண்ணிப்பாங்க ஆனால் அவங்களோட விட்டுக் கொடுத்தலுக்கும் காதலுக்கும் அங்கீகாரம் எல்லா நேரத்துலேயும் கிடைக்குறது இல்ல அன்பு.

இந்த இரண்டு வருஷம்,ஒரு ஒரு மாசமும் ப்ரீயட்ஸ் வரும்போதும் எவ்வளவு கடுப்பா இருக்கும்..எனக்குள்ளேயே சில நேரம் தோணும் அம்மா என்ன நினைச்சுப்பாங்களோனு.

அவங்ககிட்ட சொன்னவுடனே ஒரு நொடி கூட முகம் மாறாது சாதாரணமா சரி டா காயூ பூஜையை நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு வேற பேச ஆரம்பிச்சுடுவாங்க.

அதை விட நாள் தள்ளி போய் டெஸ்ட் பண்ணி ஏமாந்து போறப்போ வர்ற கோவம் ஆத்திரம் இயலாமை இதெல்லாம் ரொம்ப ரொம்ப கொடுமை அன்பு.

ஆனால் நீ உனக்குத் தெரிஞ்சோ தெரியாமயோ என்னை அதிலிருந்து எத்தனை அழகா வெளியே கொண்டு வந்துருக்க தெரியுமா..

எல்லாமே நல்லதா நடக்கும் போது காட்டப்படுற காதலை விட எதோ ஒரு பிரச்சனையில் இருந்து மீட்டெடடுக்குற காதல் ரொம்ப அழகு டா.

எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு இந்த நல்ல செய்தி வந்திருக்குனா அது எனக்காகனு சொல்றதை விட இந்த அழகான குடும்பத்துக்காக தான்.உன்னை மாதிரியே இந்த இரண்டு குழந்தைகளும் வளரணும் அன்பு.”,என்றவள் அவனது தோள் சாய்ந்து கொண்டாள்.

“சந்தோஷமா இரு டி பொண்டாட்டி..நாங்க எல்லாரும் எப்பவும் உனக்காக இருக்கோம்.”

“சாதாரணமா சொல்லிட்ட..அது தான் டா என்னோட மிகப்பெரிய பலமே.”,என்றவள் கணவனின் அணைப்பினுள் அடங்கிப் போனாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode