“உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

விளக்கம்
கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும்,

அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?”

படம் முடித்து பார்க்கிங்கிற்கு வந்தவுடன் தனது வண்டி சாவியை அன்புவிடம் நீட்டினாள் காயத்ரி.அவளது மனவோட்டம் புரிந்தவனாய் அதை வாங்கிக் கொண்டவன் பைக்கை உயிர்ப்பிக்க மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இருபக்கமும் காலைப் போட்டு அமர்ந்தவள் அவனது தோளில் கைப்போட்டுக் கொண்டாள்.

“எனக்கே சில்லியா இருக்கு கொஞ்சம்..”

“ஏன் காயூ..”

“காலேஜ் பசங்களா என்ன நாம..இப்படியெல்லாம் அல்ப ஆசை..பட் ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்றேன்..”,எனும் போதே சாலையில் இருந்த போக்குவரத்துக் காவலர் இவர்களின் வண்டியைத் தடுத்து ஓரம் கட்டினார்.

காயத்ரி ஹெல்மெட் போட்டிருக்க அன்பு காயத்ரியிடம்,

“இதென்ன டிஎஸ்பிக்கு வந்த சோதனை..”,என்று கூறி சிரிக்க அவளோ மற்றவர்கள் அறியாது லேசாய் அவனது கையைக் கிள்ளினாள்.

“என்னப்பா மச மசனு நின்னுகிட்டு இருக்க பேப்பர் எல்லாம் எடுத்துகிட்டு ஐயாகிட்ட போ..”,என்று ஏட்டு கூற அவள் தனது பைக் சம்மந்தப்பட்ட பேப்பர்களை எடுத்துக் கொள்ள அன்பு பாக்கெட்டில் இருந்த தன் பர்சில் இருந்து லைசென்ஸை எடுத்துக் கொண்டு முன்னே நடந்தான்.

இன்ஸ்பெக்டர் அவன் கையிலிருந்து பேப்பரை வாங்கிய வண்ணம் இருவரையும் மேலும் கீழும் பார்க்க காயத்ரி ஹெல்மட்டை கழட்டாமலே நின்றாள்.

“எல்லாம் சரியா இருக்கு..ஆனாலும் வண்டி ஓட்றவன் ஹெல்மெட் போடணும்னு தெரியலையேப்பா உங்களுக்கு…1500 ரூபாய் ஃபைன் கட்டிட்டு கிளம்பு என்றபடி பேப்பர்களை அவன் கையில் திணித்திட அன்பு ஒன்றும் கூறாமல் பர்சை எடுக்கச் சென்றான்.

அவசரமாய் அவனைத் தடுத்தவள்,”ஹெல்மெட் போடாததுக்கு ஃபைன் அமௌண்ட் இது இல்லையே..”

“விடு காயூ..”

“நீ சும்மா இரு அன்பு அடுத்தவனுக்கு நடந்தாலே காண்டாகும்.இதுல..”

“சார்..”

“என்னம்மா?என்ன வேணும்..நான் போலீஸா இல்ல நீயா??”

“நானும் தான்”, என்றவள் ஹெல்மட்டைக் கழட்டிவிட்டு தன் பாக்கெட்டில் இருந்த ஐடி கார்டை எடுத்துக் காட்ட அந்த அதிகாரியின் முகம் சுருங்கிவிட்டது.

விரைப்பாய் ஒரு சல்யூட் அடித்தவர் என்ன செய்வதென தெரியாமல் நிற்க அவரைக் கவனித்த ஏட்டுகள் அவரருகில் வந்து நின்றனர்.

“ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்களே எல்லாரும்.கல்லா கட்டுச்சா இன்னைக்கு?!”

“மேடம் அது..”

“ஏன் சார் இப்படியிருக்கீங்க…உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் பண்றதுக்கு தான் மொத்த டிபார்ட்மெண்ட் மானமும் போகுது..எல்லாரையும் அனுப்பிவிட்டு ஸ்டேஷனுக்கு கிளம்புங்க…ரைட் நவ்..”,என்றவளின் கர்ஜனையில் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு இடத்தை காலி செய்தனர்.

“உண்மையாவே நீ அந்நியனா தான் இருக்க..”

“பின்ன உன்கிட்ட இருக்குற மாதிரி சுத்திட்டு இருந்தா எவன் மதிப்பான் சொல்லு..அதுவும் ஆம்பளைங்க அதிகம் இருக்குற என் வேலையில..”

“ம்ம் உனக்கு ரொம்ப பொருத்தமா தான் இருக்கு..போலாமா மேடம்..”,என்றவனின் பவ்யத்தில் தன் ஹெல்மெட்டைக் கொண்டு இடித்தாள்.

ஹோட்டலிற்கு அருகிலே இறங்கிக் கொண்டவன் கண்களாலேயே விடைபெற பைக் உயிர்பித்தவளும் தலையசைப்போடு கிளம்பியிருந்தாள்.

இரவு சீக்கிரமே வீட்டிற்கு வந்தவன் ராகினியிடம் காயத்ரியின் பெற்றோர் சம்மதத்தைப் பற்றி தெரிவித்தான்.

“நல்லது கண்ணா..ஒரு நிமிஷம் இரு இதோ வரேன்.”,என்றவர் எழுந்து சென்று காலண்டரை எடுத்து வந்தார்.

“புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு டா..நான் காலையில் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“சரிம்மா..”

“என்ன டா எதுவும் சொல்லணுமா?”

“அது..தப்பா எடுத்துக்காத..”

“என்ன டா புதுசா?”

“இல்ல..நமக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லனு தெரியும்.அதனால கல்யாணத்தை ரொம்ப தள்ளி வைக்க வேண்டாம்னு அப்பாகிட்ட சொல்றியா?!”

“!!!”

“ம்மா..அவளும் நானும் ஒரே வயசு மா..எனக்கே எவ்வளவு சங்கடம்.இத்தனை நாள் எப்படியோ இனி அவளுக்கு தர்ம சங்கடம் இருக்கக் கூடாதுனு பார்க்குறேன்.”

“உன் மனசுக்கு நீ நினைச்சதெல்லாம் நடக்கும் அன்பு..நான் அப்பாகிட்ட பேசுறேன்.சந்தோஷமா இரு..”,என்றவர் கன்னம் தட்டிச் சென்றார்.

சிறியவர்கள் அதிசயமாய் தூங்கியிருக்க ஆனந்தன் மட்டும் அண்ணனைப் பார்த்துவிட்டு அவனோடு வந்து வாசலில் அமர்ந்தான்.

“தூங்கலையா ஆனந்தா?”

“போகணும்ணே..நீ சாப்டியா?”

“ம்ம் சாப்ட்டேன்..”

“அண்ணி ரொம்ப நல்ல மாதிரி இருக்காங்கண்ணே..”

“ம்ம்”,என்றவன் புன்னகைக்க ஆனந்தன் அவனையே பார்த்திருந்தான்.

“என்ன டா?”

“மனசுல எதுவும் போட்டு கஷ்டபடுறியா ண்ணே..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல டா..ஏன் அப்படி கேட்குற?”

“முகம் உன் செயல் எல்லாமே சொல்லுதே..”

“தெரில டா..அவளை சீக்கிரமா எந்தப் பிரச்சனையும் இல்லாம நம்ம வீட்டுக்கு வர வைச்சுடணும்னு இருக்கு.”

“அதான் எல்லாம் நல்லபடியா நடக்குதே..ஏன் தேவையில்லாம குழப்பிக்குற நீ..”

“அப்படியில்ல..நம்ம வரை எந்த பிரச்சினையும் இல்ல..ஆனால் பெரியவங்கனு பேசும் போது அது இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்டதா மாறிடும் இல்ல..”

“அப்பா அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதா?”

“டேய் அப்பா அம்மாவும் மாமியார் மாமனாரும் எப்பவுமே ஒண்ணு கிடையாது ஆனந்தா..”

“…”

“அதனாலேயே அவ தான் முதல்ல காதலைச் சொன்னாங்கிற விஷயத்தைக் கூட அவங்ககிட்ட சொல்லல..நாளை பின்ன யாருகிட்டயாவது எதார்த்தமா சொல்ல போய் யாரும் அவளை எதுவும் சொல்லிடக்கூடாது..”

“நீங்க இன்னும் கொஞ்சம் முன்னாடியே சேர்ந்துருக்கலாம்ண்ணே..”,அதற்கும் புன்னகைத்தவன்,

“விதினு ஒண்ணு இருக்குல..”

“ம்ம் நீ தேவையில்லாம யோசிக்குறதை விட்டுட்டு சந்தோஷமா இருண்ணே..எல்லாம் நல்லதா தான் நடக்கும்.நாங்க மூணு பேரு இருக்கும் போது அப்படியெல்லாம் தப்பா நடக்க விட்டுருவோமா சொல்லு..”

“தேங்க்ஸ் டா..ஆமா இந்த வாலுங்க இரண்டும் என்ன சொன்னாங்க”

“இரண்டும் செம குஷில சுத்துதுங்க..அதுகுள்ள கல்யாணத்துக்கு என்ன எல்லாம் பண்ணணும்னு ப்ளான் போட ஆரம்பிச்சாச்சு.”

“ம்ம்..எனக்கு நீங்க எல்லாம் அவளை மீட் பண்ணதே பாதி நிம்மதி..தனியா வளர்ந்தவ இல்ல..உங்களை எல்லாம் பார்த்து அவளுமே ரொம்ப எக்ஸைட் ஆகிட்டா..”,எனும் போதே காயத்ரி அவனை கைப்பேசியில் அழைக்க ஆனந்தன் தூங்க செல்வதாய் எழுந்துச் சென்றான்.

“சொல்லு டா சாப்டியா?”

“சாப்ட்டேன் அன்பு..என்ன பண்ற?”

“சும்மா ஆனந்தனோட பேசிட்டு இருந்தேன்..நீ என்ன பண்ற?!”

“என்ன சொல்றார் பெரிய தம்பி..”

“உனக்கு கொழுந்தன் டி..”

“…”

“இதென்ன வம்பாயிருக்கு எப்படி பேசினாலும் ஒத்துக்க மாட்ட னா நான் பாவம் இல்லையா..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சட்டுனு…கேட்க நல்லாயிருந்தது..கொழுந்தன் மச்சினன் எல்லாம் எனக்கு வேண்டாம்..அவங்க எனக்கும் தம்பி தான்..”

“அது சரி…அம்மா புதன் கிழமை நாள் நல்லாயிருக்குனு சொன்னாங்க காயூ..அப்பாகிட்ட பேசிட்டு நாளைக்கு கன்பார்ம் பண்றேன்.”

“என்ன டா நீ இப்படி அடாவடியா பண்றதை எல்லாம் பார்த்தா பத்து நாள்ல கல்யாணத்தையே முடிச்சுருவ போலேயே..”

“அம்மாகிட்ட அதையும் சொல்லிட்டேனே..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்..”,என்றவன் சிரிக்க காயத்ரிக்கு முகம் சிவந்து போனது.