மீட்டிங் நடக்கும் இடத்தை அடைந்தவள் உள்ளே சென்று  கதவைத் திறக்க அத்தனை கண்களும் அவளையே பார்த்திருந்தன.

சில கண்களில் இரக்கம் சிலவற்றில் குரோதம் சிலவற்றில் ஏளனம் ஒரு ஜோடி கண்களிலோ பெரும் திருப்தி.ஏழிசைக்கோ இருந்த திடமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டிருந்தது.

அவளுக்கு முன் ராஜு செல்ல பின்புறம் பக்கவாட்டில் ஷ்யாம் நடந்து சென்றான்.

முதல் வரிசையில் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தவுடன் இருபுறமுமாய் நின்று கொண்டனர்

மீட்டிங் ஆரம்பித்து முடியும் வரையிலுமே பிரச்சனையின்றி போனது.அடுத்த நொடி அவளிடம் கணவனைப் பற்றி விசாரிப்பதாய் பல பேர் வந்து பேசிச் சென்றனர்.

இறுதியாய் கேட்ட சொடக்கு சத்தத்தில் நிமிர்ந்தவள் பார்வையை சுழற்ற அவளை நோக்கி வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.

ஆஜானு பாகுவாய் கண்களில் இரக்கமோ பரிவோ சிறிதுமின்றி நடந்து வந்தவனைப் பார்த்தவள் ஒரு நொடி விதிர்த்து போனாள்.

“ஹே ப்யூட்டிபுல்..”

ராஜு அவனை அடிக்க கை ஓங்க ஷ்யாம் அவனைத் தடுத்து பொறுமை காத்தான்.

“இப்படி காட்டு யானைகள் இருக்குற இடத்தில் உன்னை மாதிரி ஒரு மான்குட்டிக்கு என்ன வேலை..”

“…”

“அக்சுவலா உன்னை அழிச்சு உன் புருஷனை கதற விடணும்ங்கிறது தான் என்னோட ப்ளான்.ஆனால்..”

“??!!!”

“காட் ஹஸ் சம் அதர் ப்ளான்ஸ்.இந்த அழகை காப்பாத்தி உன் புருஷனை சாகடிக்குறது..இட்ஸ் சம்திங் இன்ட்ரஸ்டிங் நோ..”,

“எத்தனை வருசமா காத்திருக்கேன் தெரியுமா..உன் புருஷன் பக்கத்துல கூட நெருங்க முடியல.இப்போ தான் குழந்தை பிறந்தது இல்ல..ரொம்ப சந்தோஷத்துல இருந்துட்டான் போல”

“!!!”

“கொஞ்சம் அசந்துட்டான் ஆனால் நானும் என்னோட வெறியும் தூங்கி பல வருஷம் ஆச்சு..சிக்கிட்டான்..”

“இன்னொரு விஷயம் தெரியுமா இந்த டென்டர் என் கைக்கு கிடைச்சதுனு வை…கண்டிப்பா எனக்கு தான் கிடைக்க போகுது..அதுக்கு அப்பறம் மொத்த ஸ்டேட்டும் என் கன்ட்ரோல் தான்..உன் குடும்பமே இருந்த இடம் தெரியாம அழிய போகுது.

ஒவ்வொரு நாளும் என்னை பகைச்சதை நினைச்சு நீங்க எல்லாம் துடிக்கணும்..ஒருத்தரையும் விட மாட்டேன்.அதிலும் நீ..உனக்காக தனி இடம் தயாராகுது டார்லிங்”,என்றவனை ஓங்கி அறைந்திருந்தாள் ஏழிசை.

“ஹவ் டேர் யூ”,என்றவன் ஒரு அடி எடுத்து வைக்க ராஜு அவனது சட்டையை பிடித்திருந்தான்.

“இந்த அவமானமும் கணக்குல இருக்கும் மிஸர்ஸ் வீரேந்திரன்..கவுண்ட் யுவர் டேஸ்..”,என்றவனின் கனல் பார்வையில் சோர்ந்து போனவளாய் அமர்ந்து விட்டிருந்தாள்.

அழுகையும் ஆத்திரமுமாய் வந்தது.என்ன செய்ய போகிறோம் யாரை காப்பாற்ற போகிறோம் என ஒன்றும் தெரியாமல் அமர்ந்தவளுக்கு தலை வலி எடுத்தது.

“அண்ணி சோர்ந்து போகாதீங்க..”,என்றவனின் குரல் நடுங்கியது.

“ஏழிசை இந்த டென்டரை எப்படியாவது நாம வாங்கிட்டா போதும் டா..மத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்.இது அவனுக்கு போச்சுனா இந்த கவர்மெண்டே அவனுக்கு கிடைச்ச மாதிரி டா..

பல கோடி ரூபாய் ப்ராஜெக்ட் அதிலேயும் மக்களுக்கு பயன்படப் போற விஷயம்.அமௌண்ட் கோட்டிங்கும் பிளானிங் டயக்ராமும் சரியா பண்ணிடோம்னா போதும்.பாத்துக்கலாம் டா.”

“எதோ ஈசியா சொல்லிட்டேள்.அரை நாளுக்கே நேக்கு மூச்சு மண்டறது.அவர் எழுந்து வர்றதை பாக்குறதுக்காக மட்டும் தான் உயிரோட இருக்கேன் ணா..”,என்றவள் எழுந்து கொண்டாள்.

மீண்டும் உணர்ச்சி துடைத்த அதே முகம்.அவள் காரில் ஏறிச் செல்ல உதட்டோர புன்னகையோடு அவளைப் பார்த்தவாறே கையிலிருந்த ரோஜாவை நசுக்கி எறிந்தான் ஜான்.

அடுத்த நாளின் விடியலைச் சந்திக்க தயாரான ஏழிசை அவளுக்கே புதியவளாய் தெரிந்தாள்.அந்த ஜானைப் பற்றி நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது.தன்னவனின் இந்த நிலைக்கு காரணமான அவனை கொலை செய்துவிடும் அளவிற்கு கோபம் வந்தது.

முக்கால் கை ரவிக்கையில் கழுத்து வரை மறைக்கப்பட்டிருக்க புடவையை பெரிதாய் மடிப்பெடுத்துக் கட்டி தலையை வழித்து வாரி பின்னலட்டு இருந்தாள்.

பார்பதற்கு பத்து வயது அதிகமாகவே தெரியும் படியான தோற்றம்.நெற்றியில் பொட்டும் வகிட்டில் குங்குமமும்.வெளியே வந்தவளைப் பார்த்தவர்களின் மனம் கனத்தது.

இந்த பெண்ணுக்கு இதெல்லாம் நடந்திருக்கவே கூடாது என்று கலங்கி நின்றனர்.வேணி அவளுக்காக பூச்சரத்தைக் கொடுக்க புன்னகைத்தவள் மறுத்து விட்டுச் சென்றுவிட்டாள்.

இங்கு வந்ததில் இருந்து அவள் தலையில் பூ இல்லாமல் பார்த்தேயிராதவளுக்கு அந்த ஜானை கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் என்ற வெறி எழுந்தது.

ஷ்யாம் சொல்வதை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டாள்.வீரேந்திரனின் மனைவியாய் அந்தக் குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் இப்போது இருப்பதை புரிந்து கொண்டவள் அதற்கான முயற்சிகளில் தன்னைத் தொலைத்தாள்.

காலை முதல் மாலை வரை அலுவலக வேலைகள் சுழற்றியடிக்க குழந்தைக்கு பால் கொடுக்க முடியாததால் எழுந்த வலி வேறு அவளைப் படுத்தி எடுத்தது.

மாலை வீட்டிற்குச் சென்றவுடன் குழந்தையைத் தேடி ஓடி வருபவளைப் பார்க்கும் பர்வதத்திற்கு அழுகையை அடக்குவது பெரும் பாடாய் இருக்கும்.அதன் பின் கணவனின் அறையிலேயே சுருண்டு கொள்வாள்.நிறைய நிறைய பேசினாள் அவளது வீராவோடு.

மாடியில் தனதறைக்குச் செல்வதை மொத்தமாய் தவிர்த்து விட்டாள்.தேவையான பொருட்களை எடுக்கச் செல்லும் அந்த இரண்டொரு நிமிடங்களும் நரகமாய் இருந்தது.எங்கு திரும்பினும் தன்னவனின் காதல் கொட்டிக் கிடந்தது அந்த அறை முழுவதும்.

குடும்பமே அவளுக்கு பக்க பலமாய் இருந்தது ஆனால் அவளின் உயிரானவனோ கண்களைத் திறப்பேனாவென ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் அன்று காலையிலேயே கோட்டையின் வாசலில் ஏதோ கூச்சலாய் இருக்க மாடியில் தனதறையில் பைலைத் தேடி வந்தவள் பால்கனி வழியே பார்க்க அவளது அத்தையும் அவள் மகனும் நின்றிருந்தனர்.

இன்டர்காமில் செக்கியூரிட்டியை அழைத்து அவர்களை உள்ளே விடுமாறு கூற அவர்களை அனுப்பிவிட்டு ராஜுவுக்கும் விஷயத்தை கூறியிருந்தான்.

ஏழிசை வாசலில் வந்து நிற்க அவசரமாய் ராஜு கீழே அவளது அத்தையை மறித்து நின்றான்.

“என்ன டி ஆடின ஆட்டத்துக்கு எல்லாம் அந்த ஆண்டவன் ஆப்பு வைச்சுட்டானா..எம் புருசனை கொன்னு எம் மகனை ஜெயிலுக்கு அனுப்பி எங்க வாழ்க்கையே நாசமாக்கின நீ எப்படி நல்லா வாழ முடியும்..”

“ஏய் வாயை மூடிட்டு கிளம்பு இங்கிருந்து.இல்லைனா உன் புருசன் நிலைமை தான் உனக்கும்”,என்ற ராஜுவைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும் பிள்ளையைத் தன்னருகில் நிறுத்தி வைத்து ஏழிசையை முறைத்தாள்.

“என்ன டி திமிரா பாக்குற..இத்தனை பட்டும் உனக்கு கொழுப்பு அடங்கலை இல்ல..விஷயம் தெரிஞ்சு இந்த நிலைமையில் உன்னைப் பார்க்கணும்னு தான் இவ்வளவு தூரம் வந்துருக்கேன்.”என்று அவள் பேசிக் கொண்டிருக்க அவளது மகனின் பார்வையோ ஏழிசையை மொய்த்துக் கொண்டிருந்தது.

“இங்க இது மாதிரி எல்லாம் கத்தப்டாது..கிளம்புங்கோ இரண்டு பேரும்.”

“கூட ஆளு இருக்குற தைரியத்தில் பேசிட்டு திரியுறியோ..புருசன் படுக்கையில் கிடந்தாலும் உனக்கு ஒண்ணும் குறைஞ்சு போன மதிரி தெரிலையே..எப்படியும் அவன் போய் சேர்ந்துருவா…”,வாக்கியம் முடிவதற்குள் ஓங்கி அறைந்திருந்தாள் ஏழிசை.

“ஏய்…”,என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவனை ஒரே அடியில் சுருள வைத்திருந்தான் ராஜு.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் கொன்னு போட்டுருவேன் புரிஞ்சுதா?”,என்றவளின் குரலில் ராஜுவே ஒரு நொடி அரண்டு போனான்.

இந்தக் குரல் இதுவரையில் கோட்டையில் கேட்டேயிராத குரல்.அத்தனை கம்பீரம் கோபம்.முகம் சிவக்க நின்றிருந்த இந்த ஏழிசை பரீட்சையமே இல்லாதவள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவ் மற்றும் பர்வதம் ராஜராஜனும் கூட பயந்து தான் போயிருந்தனர்.

“என் அப்பாவை கொன்னதுக்காகவே உன்னை இப்போவே என் கையாலே கொல்லனும்னு தோன்றது.ஆனால் பண்ண மாட்டேன்.எனக்காக என் ஆத்துகாரர் உங்களை தண்டிப்பார்.

இப்போ நீங்க பேசினதுக்கு தண்டனை வேண்டாம்?ராஜு!!!”

“அண்ணி!!!”,அவள் சத்தத்தில் அதிர்ந்திருந்தவனாய் அவள் முன் வந்து நின்றான்.

“இவா இரண்டு பேரையும் அடைச்சு வைங்கோ என் ஆத்துக்காரர் எழுந்து வர்றவரை இவாளும் வெளி உலகத்தைப் பார்க்கப்படாது.அதிலேயும் இவன்…”,என்றவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.

“நான் பாத்துக்குறேன் அண்ணி..நீங்க கிளம்புங்க..”,என்றவனின் உறுதிக் குரலில் சற்றே சமாதானமடைந்தவளாய்,

“இவாளுக்கு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ண சொல்லு.”

“சரி அண்ணி..”

வேகமாய் வீரேந்திரன் இருந்த அறைக்குள் சென்றவள் அவனது அருகில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

அவன் கையில் தலை சாய்த்துக் கொண்டவள் சில நொடிகள் அப்படியே கிடந்தாள்.

தலை நிமிர்த்தி தன்னவனைப் பார்த்தவள்,”ரொம்ப களைச்சு போயிட்டேன் வீரா.தைரியமா எல்லாத்தையும் சமாளிக்குற மாதிரி நடிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு.இதெல்லம் என்னால முடியாது.எப்போ வருவேள்..

மாமினு ஒரு தடவை கூப்பிடுங்கோளேன்.ப்ளீஸ் வீரா..”,என்றவள் ஆழ்மூச்செடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.மனம் மொத்தம் பொங்கியிருக்கும் கவலையை காட்ட இடமின்றி வழியுமின்றி கல்லாய் வெளியேறினாள்.