நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.

அத்தியாயம்-1

எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து!


எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.

“God’s own country”, என்றழைக்கப்படும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவிலுள்ள அந்த அழகிய வீட்டின் முன் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் ஒரு நொடியேனும் அவரறியாமல் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள் எனுமளவிற்கான அழகு அதன் புறத்தோற்றத்தில்.

அந்தப் பகுதியின் மிகப் பெரும் வணிகக் குடும்பம்,A&M க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் எர்ணாகுளத்தில் இல்லை எனும் வகையில் மிகப்பெரும் குடும்பம்.

அந்தக் குடும்பத்தின் மூத்தத் தலைமுறையான அஜீஷ் அவர்கள் சிறிய அளவில் தொடங்கியதொரு வியாபரமே இன்று இத்தனை விழுதுகள் தாங்கிய மரமாய் உயர்ந்து நிற்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி,துணிகள் தயாரிக்கும் நிறுவனம்,தங்க வியாபாரம் என அத்தனையிலும் தன் தனித்தன்மையைப் பதித்திருந்தனர். அஜீஷிற்கு நான்கு மகன்கள் அதில் மூவர் வெளிநாடுகளில் நிரந்தரமாய் தங்கிவிட அவரின் முதல் வாரிசான மோகன் தான் தந்தைக்கு உதவியாய் தொழிலைப் பார்த்துக் கொண்டார்.

அதனாலேயே யாருடைய ஆலோசனையும் இன்றி தன் நிறுவனத்தின் பெயரை A&M என்று மாற்றியிருந்தார் பெரியவர். மற்றப் பிள்ளைகளும் நல்ல நிலைமையில் இருந்ததால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து தற்போது அந்தக் குடும்பப் பொறுப்பைச் சுமப்பவன் ப்ரஜீஷ். மோகன் சௌமியா தம்பதியரின் புதல்வன். 35வயது என்று யாரும் கூறினால் ஒழியத் தெரியாத அளவிற்கான உடல்கட்டுடன் இருப்பவன். தாத்தாவும் அப்பாவும் வளர்த்தத் தொழிலைத் தன் திறமைக் கொண்டு மேலும் பன்மடங்காய் வளர்த்தவன்.

வெளிநாட்டில் தன் மேற்படிப்பை முடித்தவன் குடும்பத் தொழிலைப் பார்த்துக் கொள்வதாய் கூறியபோது தாத்தாவிற்கும் தகப்பனிற்கும் அப்படியாய் ஒரு பெருமை.

அதை இன்னும் அதிகமாக்குவதாய் இருந்தது அவனின் அபார வளர்ச்சி. வியாபார வட்டத்தில் தன்னை மதிக்காதவர் கூட தன் பேரனைக் கண்டு சலாம் போடுவதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் அஜீஷ்.

மோகன் தம்பதியருக்கு ப்ரஜீஷைத் தொடர்ந்து இரட்டையர்களான பெண் பிள்ளைகள் சாருலேகா- சாருலதா. பிரஜீஷை விட மூன்று வயது சிறியவர்கள்.

அஜீஷ் முதுமையின் காரணமாய் தன் 77 வயதில் இறந்துவிட மோகனும் ப்ரஜீஷுமே இப்போது அத்தனையையும் கவனித்துக் கொள்கின்றனர்.  தங்களுக்கு ஏற்ற இடமாய் எங்கெங்கோத் தேடி அவர்களைப் போன்றே இரட்டையர்களான சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தான் ப்ரஜீஷ்.

இப்படியானப் பட்டியல்கள் பெரிதாகிக் கொண்டேயிருக்க அவனது தனிப்பட்ட வாழ்வு என்பது ஒன்றுமில்லையென ஆகியிருந்தது. அவனது இளங்கலை கல்லூரி காலத்தில் சிறு பையனாய் மாநிறத்தில் இருந்தவன் நிச்சயமாய் பார்த்தவுடன் யாருடைய கவனத்தையும் ஈர்ப்பவனாய் இல்லை.

ஆனால் அப்போது அவனுக்குப் பிடித்த ஒருத்தி இருந்தாள். அவனது வகுப்புத் தோழி. அவள் மீது தான் கொண்ட காதலைக் கூறியபோது அவனது தோற்றத்தை மட்டுமே காரணமாய் கொண்டு அவனை மறுத்திருந்தாள்.

சாதாரணமாய் எடுத்துக் கொண்டதாய் காட்டிக் கொண்டாலும் அது ப்ரஜீஷின் மனதில் விழுந்த மிகப் பெரும் அடியாகவே இருந்தது.

சிறு வயதிலிருந்தே நிராகரிப்பு என்ற ஒன்றை ஏற்றுப் பழகிடாத அவன் மனதில் இது ஆறா வடுவாய் மாறிப் போனது. அன்றிலிருந்து பெண்கள் என்றாலே எந்தவித நல்ல அபிப்ராயமும் இருந்ததில்லை அவனிடத்தில்.

அந்த ஒரு காரணமே அவனைப் பெண்களை விட்டு விலக்கியிருந்தது. திருமணத்தில் இருந்தும் கூட… ஆனாலும் யாரிடமும் எந்தவித விளக்கமும் கூறியதில்லை. அவனிடத்தில் கேட்கும் தைரியமும் யாருக்கும் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

அவனது முகத்தில் ஒருவித இறுக்கம் எப்போதுமே ஒட்டிக் கொண்டது. மேற்படிப்பு முடிந்து வீடு திரும்பியவனைக் கண்டு ஆச்சரியத்தில் விழி விரித்திருந்தனர் அவனது பெற்றோர்.

தன் மனதிலிருந்த கோபங்களையும் வெறுப்புகளையும் உடல் மீது காட்டியிருந்தான். கட்டுமஸ்தான உடற் தேகமும் முகம் மொத்தமும் தாடியும் என ஆண்மையின் இலக்கணமாய் வந்து நின்றான்.

ஆனால் அதையும் கடந்து சிலக் கெட்டப் பழக்க வழக்கங்களையும் கற்று வந்திருந்தான். மது மாது என வீட்டிற்குத் தெரிந்து பாதி தெரியாமல் மீதியென தனிப்பட்ட வாழ்வை சிறிதல்ல நிறையவே கறையாக்கி வைத்திருந்தான்.

அஜீஷ் மற்றும் மோகனின் காதுகளைச் சில விஷயங்கள் எட்டினாலும் நாட்போக்கில் அவனேச் சரியாகிவிடுவான் என்று பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.  சௌமியாவையும் கண்டிக்க விடாமல் செய்திருந்தனர்.

அதைவிடத் தொழில் மீதிருந்த அவனின் வெறி, அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவனது விவேகம் மற்ற அனைத்தையும் பின் தள்ளி விட்டிருந்தது. இப்படியே வருடங்கள் உருண்டோடி விடத் திருமண வயதைக் கடந்துப் பல வருடங்கள் போய்விட்டிருந்தது.

சௌமியாவின் மிகப் பெரும் கவலையே மகனின் திருமணம் பற்றியதாய் தான் இருந்தது. எத்தனை விதமாய் பேசிப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனவராய் அவரே அமைதியாகிவிட்டார்.

சௌமியா பூஜையறையில் அமர்ந்திருக்க மோகன் அந்த அழகிய வராண்டாவில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் ப்ரஜீஷிற்கு மிகவும் பிடித்த இடமெனில் அது அவனது உடற்பயிற்சிக் கூடம் தான்.

தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு வியர்வைச் சொட்டும் உடையோடு வந்து சாப்பாட்டு மேசையில் அவன் அமர்ந்த அடுத்த நிமிடம் பணியாள் அவனுக்கான க்ரீன் டீயைக் கொண்டு வந்து வைத்துச் சென்றிருந்தான்.

கைப்பேசியை நோட்டமிட்டவாறே தனக்கான டீயைப் பருக ஆரம்பித்தவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளியே கிளம்பத் தயாராகச் சென்றிருந்தான். இது தான் அவனது நடைமுறை. அத்தனையும் அட்டவணைப்படி நடக்கும்.

அடுத்த அரைமணி நேரத்தில் அலுவலகத்திற்க்கான முழுக்கை சட்டையும் பார்மல் பேண்டுமாய் வேக நடைகளோடு வந்தவன் தாய் கொடுத்த உணவை என்ன ஏதெனக் கூட பார்க்காமல் இரு வாய்களில் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருந்தான்.

அனைத்தையும் பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்த சௌமியாவிற்கு பெருமூச்சே எழுந்தது. கணவருக்கானக் காபியை எடுத்துக் கொண்டு சென்றவர் வழக்கம் போல் அவரிடம் தன் மனக் குமுறல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

“மோகனேட்டா… இவன் எப்போ தான் மாறப் போறான்…வயசும் ஏறிட்டே இருக்கு… நமக்குப் பிறகு அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டாமா? நீங்களும் இப்படி அவன் இஷ்டத்துக்கு இருக்க விட்டா எப்படி?

நேத்துக் கூட சித்தி கேட்டாங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கலனு…காசு பணத்தை மட்டும் வச்சு என்ன பண்றது..”

“அயேடா…பொறு..பொறு..கொஞ்சம் மூச்சு விடேன்…ஏன் இப்போ இப்படி புலம்புற…இத்தனை வருஷமா கேட்காதவனா இந்த ஒரே நாள்ல கேட்டுறப் போறான்..உன் விருப்பத்துக்காக கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிக்கச் சொல்றியா சௌமி…

கல்யாணமும் குழந்தையும் கடவுளோட எழுத்துப்படி தான் நடக்கும்..நாம ஒண்ணும் பண்ண முடியாது..எப்படியும் அவனுக்கான ஒருத்தி இதுக்கப்பறம் பிறக்கப் போறதில்ல…நீ போய் வேலையைப் பாரு..எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்..”

“ம்ம் ஏதோ ஒண்ணைச் சொல்லி என் வாயை அடைச்சுருங்க…அப்பாவும் பிள்ளையும் என்னவோ பண்ணித் தொலைங்க…”

வீட்டின் பிரம்மாண்டத்திற்குக் குறைவில்லாமல் நிமிர்ந்து நின்றது A&M க்ரூப் ஆப் கம்பெனி. லிப்டில் இருந்து வெளி வந்தவனுக்கு அவனைத் தெரிந்த ஒன்றிரண்டு பேர்  தங்களின் காலை வணக்கத்தைத் தெரிவிக்கத் தனது தலையசைப்போடு அதை ஏற்றுக் கொண்டவனாய் அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனைத் தொடர்ந்து அவனது நண்பனும் கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருப்பவனுமான ராஜீவ் உள்ளேச் சென்றான்.

ராஜீவும் ப்ரஜீஷும் பள்ளிக்காலம் தொடங்கி நண்பர்கள்..படிப்பை முடித்து ப்ரஜீஷ் தொழிலைப் பார்க்கத் தொடங்கியபின் ராஜீவைத் தன்னோடுச் சேர்த்துக் கொண்டான்.

ப்ரஜீஷை நெருங்குவதற்கு யாரும் பயப்படும் நேரம் கூட அவனிடம் பேசும் தைரியமுள்ள ஒரு ஆள் உண்டெனில் அது ராஜீவ் மட்டுமே.அவனைப் பற்றிய அத்தனையையும் அறிந்தவன்.

“மார்னிங் டா”

“ம்ம் வா டா…பேபி இப்போ எப்படி இருக்கா?ஹாஸ்பிட்டல் போனியா?”

“ம்ம் பரவால்ல டா..புட் பாய்ஸன் மாதிரி ஆயிடுச்சு திடீர்னு..ஸ்கூல்ல எதாவது சாப்ட்டு அது ஒத்துக்கலனு நினைக்குறேன்..”

“ம்ம்..ஏஞ்சல் சமாளிச்சுப்பாளா…இன்னைக்கும் லீவ் எடுத்துக்கச் சொன்னேன் தான..”

“இல்ல டா ஒண்ணும் பிரச்சனை இல்ல அவ பார்த்துப்பா..அதுவும் இல்லாம கேர் டேக்கர் இன்னைக்கு வந்துருவாங்க..”

“ம்ம்…”

“அம்மா கால் பண்ணிருந்தாங்க ப்ரஜி நேத்து..”

“என்னவாம்??”

“புதுசா என்ன?உன் கல்யாணத்தைப் பத்தி தான்…”

“அவங்களுக்கும் வேற வேலையில்ல..உனக்கும் வேற வேலையில்ல..அவனவனுக்கு கல்யாண வயசுலேயேப் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது.. நீங்க என்னடானா…அதுவும் இல்லாம கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கல…மத்த எல்லாம் பார்த்தாச்சு…”

“டேய்…”

“நீங்க தான் டா என்னப் பேச வைக்குறீங்க… சரி விடு.. இன்னைக்கு என்ன ஸ்கெட்டியூல்”, என்றவனை இயலாமையோடுப் பார்த்திருந்தான் ராஜீவ்.