நாட்கள் அதன்போக்கில் அழகாய் நகர ஏழிசையின் மொத்தமும் வீரேந்திரன் என்றாகியிருக்க வீரேந்திரனுக்கோ தன் மொத்த பலமும் அவனது இசை தான் என்றிருந்தது.

முடிந்த போதெல்லாம் இரவு சீக்கிரமே வீட்டுக்கு வந்து தன்னவளோடு அழகான நிமிடங்களை கரைத்தான்.

அவள் கேட்கும் எந்த விஷயமும் நடந்தே தீரும் வீரேந்திரனிடம்.சமையலறையின் பின்பகுதியில் அவள் கேட்டது போலவே ஷெட் அமைத்து மின் விசிறிகளோடு உட்காருவதற்கு டேபிள் சேர்களும் போடப்பட்டன.

இசை அறைக்கட்டளையின் மூலம் அவர்களது அடிமட்ட தொழிலார்கள் அனைவரின் குழந்தைகள் படிப்பு செலவும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கேட்பவர்களுக்கு எல்லாம் உதவி செய்தவன் தான் எனினும் கேட்கவே வேண்டாத சூழ்நிலையை உருவாக்கிய மனைவியின் மேல் காதல் பொங்கி பெருகித் தான் போனது.

தினமும் காலையில் அவள் முகத்தில் விழித்து இரவு விழி மூடும் நேரமும் அவளது முகத்திலேயே விழி பதித்து முடிக்கும் போது தான் அன்றைய நாள் நிறைவு பெறுவதாய் இருந்தது வீரேந்திரனுக்கு.

ஏழிசை ஒவ்வொன்றுக்கும் கணவனையே நாடினாள்.முகம் பார்த்தே விழி அசைவு வைத்தே அவனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு விடுவாள்.இப்படியான வாழ்வில் அவள் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த விஷயமும் நடந்தது.

திருமணம் முடிந்து இரு மாதங்கள் கடந்திருந்த நிலையில் கணவன் வேலைக்கு கிளம்பும் வரையுமே கூட சாதாரணம் போல் இருந்தவளால் அதற்கு மேல் பயங்கர சோர்வாய் உணர்ந்தாள்.

இரு நாட்களாகவே ஒரு மாதிரி சோர்வாய் தான் இருந்தது.இருந்தும் சமாளித்துக் கொண்டாள்.இன்று ஏனோ அதுவும் முடியாமல் போக அறையில் வந்து படுத்தவளுக்கு என்னவென்றே சொல்ல முடியாத ஒரு நிலை.

சட்டென அந்த எண்ணம் உதிக்க ஒரு வேளை இருக்குமோ என்று எண்ணியவளுக்கு மனமெல்லாம் படபடத்து போனது.

எதையும் யோசிக்காமல் வீரேந்திரனுக்கு அழைத்திருந்தாள்.வழக்கமாய் இந்த நேரத்தில் அழைக்காதவளிடம் இருந்து வந்த அழைப்பை மறுநொடியே ஏற்றவன்,

“நல்லாயிருக்க தான இசை.”

“வேலையா இருக்கேளா?”

“ம்ம் மீட்டிங்ல இருக்கேன் என்னாச்சு?”

“நீங்க வரும்போது எனக்கு மெடிக்கல் ஷாப்பில் ஒண்ணு வாங்கிண்டு வரேளா?”

“என்னடி ஆச்சு?அம்மாகிட்ட போ முதல்ல..நான் பேசுறேன்.”

“வீரா..”,என்ற அழைப்பில் நிதானித்தான்.அறையில் அவர்களுக்கு மட்டுமே இருக்கும் அழைப்பு அது.போனிலோ மற்ற நேரத்திலோ தவறியும் அவள் அழைக்க மாட்டாள்.

“ப்ரெக்னென்ஸி கிட் வாங்கிட்டு வரேளா?”

“மாமி..”

“ஒரு வேளை இருக்குமோனு தோன்றது.செக் பண்ணிட்டு டாக்டர்கிட்ட போலாம்.”

“அம்மா கிட்ட சொல்லு டி நல்லாயிருக்கல..”

“வேண்டாம் நீங்க வாங்கோ அப்பறம் மத்தவாகிட்ட சொல்லிக்கலாம்.ப்ளீஸ்.”

“மாமி..குட்டி இசை வேணும் டி..”

“இரண்டு பொண்ணு இரண்டு ஆண்..இல்லை நாலுமே வீராவா இருந்தாலும் பரவாயில்லை நேக்கு.”

“பேராசை டி உனக்கு..ஒண்ணே ஒண்ணு தான் உடம்பு என்ன ஆகுறது..”

“அதெல்லாம் என் வீரா பார்த்துப்பார்.நாலு தான்.”

“…”

“ஹலோ?!”

“கார்ல ஏறிட்டேன் இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன் மாமி..ரெஸ்ட் எடு.”

“ஐயோ மீட்டிங்?”

“பை..”,என்றதைக் கேட்டவளுக்கு முகத்தில் புன்னகை எழுந்தது.அரை மணி நேரத்தில் ஆயிரம் முறை வயிற்றைத் தடவிப் பார்த்து விட்டாள்.

தன்னவனிடம் பேசும் போது வராத வெட்கமெல்லாம் இப்போது அவனைப் பார்க்க போகிறோம் என்றதை நினைத்து அதிகமாய் வந்தது.

அறைக்குள் நுழைந்தவன் கட்டிலின் ஓரமாய் அமர்ந்திருந்தவளை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

“இசை…டென்ஷனா இருக்கு டி..”

“கொடுங்கோ பார்த்துட்டு வரேன்”,என்றவள் கவரைப் பிரித்து எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஆர்வமும் பதட்டமுமாய் அமர்ந்திருந்தான் வீரேந்திரன்.சற்று நிமிடத்தில் வெளியே வந்தவள் அவனருகில் வரும் வரை கூட பொறுக்க மாட்டாதவனாய் குளியலறை வாசலுக்கே வந்திருந்தான்.

தன் கையிலிருந்த கிட்டை அவனுக்கு நேராய் நீட்டியவள் முகம் சிவந்து போய் இருக்க இரு கோடுகளைப் பார்த்தவன் தன் மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

“தேங்க் யூ இசை..”

“லவ் யூ வீரா..”

“லவ் யூ சோ மச் டி”,என்றவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்ததை அவனது செயல்களே எடுத்துரைத்தது.அவற்றில் கை வைக்கவே தயங்கியவனின் கரம் பிடித்து தன் வயிற்றில் வைத்தாள்.

“டாக்டர்கிட்ட போலாம் டி..கவனமா இருக்கணும்..ரொம்ப படி ஏறாத கொஞ்ச நாளைக்கு.”

“ம்ம்..அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு போலாம்”

“சரி வா..”,என்று திரும்பியவனை இழுத்து கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து விடுவித்தாள்.

கீழே தங்களறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்து யோசனையோடு பெரியவர்கள் அமர்ந்திருக்க வீரேந்திரன் அவர்களிடம் எதுவும் சொல்லுவான் என்று ஏழிசைக்குத் தோன்றவில்லை.அத்தனை மகிழ்ச்சியில் தன் நினைவுகளிலேயே இருப்பது புரிந்து ஏழிசையே வாய் திறந்தாள்.

“ப்பா..ம்மா..எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கோ.”,என்றவள் கணவனோடு அவர்களது காலில் விழ பெரியவர்கள் மனதார ஆசீர்வாதம் செய்தனர்.

“என்ன விஷயம் கண்ணா?”

“ம்மா..நான்..கன்சீவ்வா இருக்கேன்.இப்போ தான் செக் பண்ணிணோம்.”

“என் தங்கமே..”,என்றவர் மருகளைக் கட்டிக் கொண்டார்.பெரியவர்களின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.தன் மகனின் வாரிசு வரப்போவதை விட வேற என்ன செய்தி இத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்துவிடும்.

“இந்திரா..”,என்றபடி இருவரும் அவனை தங்களோடு சேர்த்தணைத்துக் கொண்டனர்.

“டாக்டர்கிட்ட போயிட்டு வந்துறோம் மா..”

“பார்த்து போயிட்டு வாங்க..”,என்றவர் நேராய் பூஜையறைக்குள் நுழைந்து கொண்டார்.

காரில் அமர்ந்து சில நொடிகள் அமைதியே நீடித்தது.ஏழிசையின் கரம் மட்டும் வீரேந்திரனின் கரத்தை விட்டு பிரியவில்லை.

“ஏன் எதுவும் பேச மாட்றேள்.”

“வாழ்க்கையே மாறிடுச்சு டி நீ வந்த பிறகு.இதே காரில் உன் வீட்டில் இருந்து உன்னைக் கூட்டிட்டு வந்தப்போ கூட எனக்கு பெருசா எல்லாம் எதுவும் தோணலை.ஆனால் இப்போ..”

“உங்களையே உரிச்சு வைச்சு ஒரு பையன் வேணும்.”

“எனக்கு இசை தான் வேணும்.”

“அவளுக்கு இந்த லோகத்துல உங்களைத் தவிர எதுவுமே வேண்டாம்.”,என்றவளை விழிகளில் நிறைத்துக் கொண்டான்.

மருத்துவரிடம் உறுதிபடுத்தி விட்டு தாய்க்கும் அழைத்துக் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பத் தயாராக ஏழிசை தயக்கமாய்,

“இங்க பக்கத்தில் கோவில் எதுவும் இருந்தா போலாமா?”

இங்கு வந்த இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட தன்னை எங்கேயும் அழைத்துப் போகும்படி கேட்டிறாதவள் இப்படி கேட்டதும் மறுக்கத் தோன்றாமல் பாதுகாவலர்களையும் தன் காரை பின்பற்றுமாறு பணித்திருந்தான்.

அந்த வழியில் இருந்த ஒரு சிறு கோவிலின் முன் கார் நிற்பதை உணர்ந்தவள் புன்னகையாய் கீழே இறங்க எத்தனிக்க,

“தப்பா எடுத்துக்காத டி.இங்க தான் கூட்டம் இருக்காது..நம்ம நல்லதுக்காக தான்.”

“கோவில்ல சின்னது என்ன பெருசு என்ன எல்லாமே கோவில் தான்.அதுவும் உங்களோட வர்ற முதல் இடம் நேக்கு ரொம்ப பிடிச்சுருக்கு வாங்கோ போலாம்.”,என்றவளை எப்போதும் போல் ஆச்சரியமாய் பார்த்திருந்தான்.

அவனோடு சேர்ந்து வணங்கி விட்டு பிரகாரத்தைச் சுற்றி வர ஆரத்தி தட்டில் அவன் வைத்த நோட்டுக்கட்டை பார்த்து வாய் பிளந்து நின்றிருந்தார் கோவில் பூசாரி.

கோட்டையே அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது பர்வதம் ராஜராஜனின் ஏற்பாட்டால்.ரவீந்தரும் உமையாளும் கூட வந்து விட்டிருந்தனர்.

“அக்கா கன்ங்க்ராஷுலேஷன்ஸ்.”,என்று உமையாள் கை கொடுக்க ரவி தமையனை ஆரத் தழுவிக் கொண்டான்.

அதற்குள் காவ்யாவிடம் இருந்து அழைப்பு வர இப்போதைக்கு மனைவி வரப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் தனதறைக்குச் சென்று விட்டான் வீரேந்திரன்.

“ஏழிசை வாழ்த்துக்கள்.உடம்பை நல்லா பார்த்துக்கோ..வளைகாப்புக்கு வந்துடுவோம் நாங்க.”

“வாழ்த்துக்கள் டா தங்கச்சி..ஹாப்பி ப்ரெக்னென்ஸி.”,என்ற ஈஸ்வரிடமும் பேசிவிட்டு வைத்த நொடி திவ்யா அழைத்தாள்.

“அண்ணி கன்ங்க்ராட்ஸ்…”,நாங்க நாளைக்கே வரோம் செம்ம ஹேப்பி தெரியுமா..”,என்று பேசிவிட்டு வைக்க அடுத்ததாய் ராகவ் அழைத்திருந்தான்.

“ஏஞ்சல் கங்க்ராட்ஸ்.எனக்கு முதல்ல பொண்ணு தான் வேணும்.இந்த ஜிஷா குட்டி மாதிரி அழுமூஞ்சியா இல்லாம என் பொண்ணு உங்களை மாதிரி சமத்தா இருக்கணும்.நாளைக்கு காலையில் அங்க இருப்பேன் டாடா…”,என்று போனை வைத்தவனின் எதிரில் காளியாய் நின்றிருந்தாள் ஓவியா.

ஓவியா கிட்டத்தட்ட இரண்டரை வருடமாய் அவனை மனதிற்குள் காதலித்து வருகிறாள்.ஆனாலும் அவனிடம் சொல்லுவதற்கு தைரியமே வரவில்லை.

அவளைத் தவிர அவள் காதல் பற்றி அனைவராலும் ராகவிற்கு தெரிந்து தான் இருந்தது.அவள் காதலை அறிந்த நொடி முதல் அவனுக்குமே அவள் மீது தனிப் பிடித்தம் தான்.இருந்தும் அவளை சீண்டிப் பார்க்க எண்ணியவனாய் வாயே திறக்காமல் இருந்தான்.

இன்று எப்போதும் போல் கல்லூரியில் அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் பேசியதைக் கேட்டு ஒரு நொடி உறைந்தே போனாள்.

அவன் பேசி முடிக்க காத்திருந்தவளாய் அவன் முன் கோவத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளை அங்கு எதிர்பாராதவனாய் திகைத்து நின்றான் ராகவ்.

“யெஸ்?!”

“ஐ அம் ஓவியா தர்ட் இர் சீஎஸ்.”

“ஓ சொல்லுங்க..”,என்றவனின் அந்நிய பேச்சில் இன்னும் கோபமானவளாய் அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தாள்.

“ஹே..”

“என்ன ஹே..உங்களையே நினைச்சு ஒருத்தி தினம் தினம் உருகி கரைஞ்சா நீங்க யார் கூடவோ போன்ல கொஞ்சிட்டு இருப்பீங்களா?”

“!!!”,அவளது பொஸசிவ்னெஸை நினைத்து சிரிப்பு வந்தது ராகவிற்கு.அவளை மேலும் சங்கடப்பட வைக்க விரும்பாதவனாய்,

“ரிலாக்ஸ்..”,என்றவன் அத்தனை அருகில் நிற்பவளின் மேல் கை பட்டுவிடாமல் இருக்க இரு கைகளையும் தூக்கி சரணடைவது போல் நின்றிருந்தான்.

“என்ன ரிலாக்ஸ்..உண்மையான அன்பை புரிஞ்சுக்க மாட்டீங்க..நல்லா எங்கேயாவது போய் ஏமாந்துட்டு இந்த பொண்ணுங்களே இப்படிதான்னு முத்திரை குத்த வேண்டியது.”

“யாரும் பார்த்தா தப்பா எடுத்துக்க போறாங்க..கூல் டவுண்..”,அவன் கூறுவது மண்டைக்கு உரைக்க சட்டென அருகிலிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவள் கண்ணீரை மறைக்க கண்களை வேக வேகமாய் சிமிட்டி தன்னைச் சரி செய்தாள்.

“எதுக்கு இவ்வளவு கோபம்.”

“…”

“இவ்வளவு மனசில் வைச்சுருக்குறவ என்கிட்ட வந்து சொல்லிருக்கணுமா இல்லையா?”

அவனது பேச்சின் தொனியே அவனுக்கு தன்னைப் பற்றி தெரியும் என்பதை எடுத்துரைக்க அதிர்ச்சியாய் அவனை நோக்கிவளுக்கு மீண்டும் அவன் போனில் பேசியது மனதில் எழுந்தது.

“என்னைப் பத்தி தெரிஞ்சுமா..”,என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

“என்ன தெரியணும் உனக்கு?”

“….”

“நான் பேசிட்டு இருந்தது என் அண்ணி கூட”,என்றதும் விரிந்த அவள் விழிகளை வெகுவாய் ரசித்தான்.

“ஏஞ்சல்??”

“நான் அவங்களை அப்படி கூப்பிடுவேன்”,என்றபடி எவ்வித தயக்கமும் இன்றி தன் போனில் அவளது பெயரைக் காட்டிவிட்டு வால்பேப்பரில் இருந்த தன் அண்ணா அண்ணியின் புகைப்படத்தைக் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்தவளுக்கு மனமெல்லாம் லேசாகி விட்டிருந்தது.அவசரப் பட்டு விட்டோமோ என்று தன்னைத் தானே திட்டியவளாய் ராகவை பாவமாய் பார்த்தாள்.

“அது..வந்து..சாரி..”

“இட்ஸ் ஓகே..இவ்வளவு இஷ்டமா?”

“ம்ம்..”

“அப்பறம் ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல..”

“அது உங்க குடும்பம் பத்தி என் ப்ரெண்ட் சொன்னா..நான் சாதாரண மிடில் க்ளாஸ் பேமிலி..அதான்…ஆனால் இன்னைக்கு நீங்க பேசிதை கேட்டு என்னால…”,என்றவளின் காண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.

“ஏன் அழற..கண்ணைத் தொட முதல்ல..”

“சாரி..”,என்றவள் அவசரமாய் கண்ணைத் துடைத்து தன்னை சரி செய்து கொண்டாள்.

“ஐ லவ் யூ ஓவியா..”,என்று நிறுத்தி நிதானமாய் அவன் கூறியதைக் கேட்டவளுக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.